சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை கடந்த, 2006 ஜூன், 12ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தால், கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்து, பொதுத்தேர்விற்கு தயாரான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மொழி மாணவ, மாணவியர், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.ஐகோர்ட் உத்தரவு:
சிறுபான்மை மொழி மாணவ, மாணவியரை, அவர்களது தாய் மொழியில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவ, மாணவியரை அவர்களது தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதி அளித்தது.
இந்த ஆண்டும் இதே பிரச்னை எழுந்தது. இதை எதிர்த்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டன. இதையடுத்து, பிறமொழி மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வேண்டியது கட்டாயம் இல்லை என, தலைமை நீதிபதி பொறுப்பு ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (பிப்.,27) உத்தரவிட்டது.





